‘சின்ன மச்சான் குனிய வச்சான்’ : மைத்திரி, தயா சுயாதீனமாக

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை பாராளுமன்றத்திற்கு சுதந்திரக் கட்சியிலிருந்து 16 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்த நிலையில், சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கின்ற பௌத்த பிக்குமார்களே மேற்படி யோசனையை முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே சுயாதீனமடைவது குறித்த யோசனை அடுத்த வாரம் கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடுகின்ற கட்சியின் மத்திய செயற்குழுவில் முன்வைக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பரிந்துரை நிராகரிக்கப்பட்டமை, அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாமை போன்ற பல குழப்பங்களுக்கு சுதந்திரக் கட்சி முகங்கொடுத்துள்ள நிலையிலேயே இந்த யோசனையும் தற்சமயம் முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உடன் ஒன்று சேர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.