MT New Diamond : நீர் மாதிரிகளது அறிக்கை சட்ட மா அதிபரிடம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தீ விபத்துக்குள்ளாகிய MT New Diamond கப்பலை அண்மித்த கடற்பிராந்தியத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட நீர் மாதிரிகள் தொடர்பான அறிக்கை இன்று(15) சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த கப்பலில் இருந்த அனைத்து வகையான எரிபொருட்களினதும் மாதிரிகள், நேற்று கரைக்கு கொண்டுவரப்பட்டதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.

இதனிடையே, கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் விசேட குழுவினால் New Diamond கப்பலில் இருந்த அனைத்து எரிபொருட்களின் மாதிரிகளும் பெறப்பட்டன.

மேலும், இலங்கை கடற்படையின் விசேட குழுவினால் கப்பல் காணப்பட்ட ஆழ்கடலில் எரிபொருள் கசிவு உள்ளதா என்பது தொடர்பில் நேற்று ஆராயப்பட்டது.

அத்தகைய எரிபொருள் கசிவுகள் ஏதும் ஏற்படவில்லையென கடற்படையின் ஊடகப் பேச்சாளர், கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.