விசுவமடு பகுதியில் ஒரு பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு புரிந்ததுடன், மற்றுமொரு பெண்ணைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நான்கு இராணுவத்தினருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் பாதிப்புக்குள்ளாகிய பெண்கள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள், மருத்துவ பரிசோதனை நடத்திய வைத்திய அதிகாரி உள்ளிட்ட பலர் சாட்சியமளித்துள்ளார்கள்.
வழக்குத் தொடுநர் சாட்சியங்கள் மற்றும் எதிரி தரப்பு சாட்சியங்கள் என்பன முடிவுறுத்தப்பட்டு, திங்களன்று இரு தரப்பு சட்டத்தரணிகளினதும் தொகுப்புரைகள் இடம்பெற்றிருந்தன. எதிரிகளான இராணுவத்தினர் தரப்பில் சட்டத்தரணி அசேல டி சில்வா தொகுப்புரை வழங்கினார். அரச தரப்பிலான தொகுப்புரையை அரச தரப்பு சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி வழங்கினார்.
இதன்போது, நான்காவது சிப்பாய் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இதனையடுத்து, அவரைக் கைது செய்ய பொலிஸ் மா அதிபர் ஊடாக நீதிபதி இளஞ்செழியன் பிடிவிறாந்து உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அத்துடன் இந்த வழக்கிற்கான தீர்ப்பு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.