பொலிஸ் தடுப்பின் போது நிர்வாணமாக படமெடுத்தனர் – மாணவன்

கம்பஹா கொட்டதெனியாவ 5 வயது சிறுமி சேயா பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்மை, பொலிஸார் தடுப்பின் போது, தாக்கியதாக 17 வயது மாணவர் தெரிவித்துள்ளார்

சுமார் 12 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த தம்மை பொலிஸார் நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததாகவும் குறித்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த சிறுமி மரணமான பின்னர் தமது வீட்டுக்கு வந்த சீருடையற்ற பொலிஸார், தம்மையும் தமது நண்பரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் தாம் தனிமைப்படுத்தப்பட்டு முழங்காலில் இருக்க வைக்கப்பட்டதாக மாணவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரவு நேர சாப்பாடும் தமக்கு தரப்படவில்லை என்றும் மாணவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது தாயாருக்கும் தம்மை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தம்மை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்தபோது பிரதி பொலிஸ் அதிகாரி ஒருவரும் அங்கிருந்தார்.

இன்னும், சிறுமியின் கொலையில் தாம் சம்பந்தப்படவில்லை என்று கூறியபோதும் தம்மை கொல்லப்போவதாக பொலிஸார் எச்சரித்தனர் என்றும் மாணவர் குறிப்பி;ட்டுள்ளார்.

இதேவேளை விடுதலை செய்யப்பட்ட மாணவரின் தாயார், தமது மகன் படிப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளமையால் எவரும் அவரை குற்றவாளியாக பார்க்கவேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

(riz)