ஜோர்டான் எம்.பி’யின் மகன் ஐ.எஸ் தீவிரவாதப்படையில் கைகோர்ப்பு

ஐ.எஸ். தற்கொலை படையில் ஜோர்டான் எம்.பி. மகன் தீவிரவாதி ஆக மாறியுள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதில் பல நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், ஜோர்டான் நாட்டின் எம்.பி. யின் மகனும் சேர்ந்து தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

ஜோர்டான் எம்.பி. மாஷென் தனேன். இவரது மகன் முகமது என்பவர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார். இருந்தும் அவர் கல்லூரியில் இருந்து விலகி ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார்.

அங்கு தற்கொலை படை பிரிவில் பயிற்சி பெற்றார். ஈராக்கில் தற்கொலை தாக்குதல்களை நடத்தினார். இதற்கிடையே தனது மகன் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து இருப்பதை எம்.பி. தனேன் உறுதி செய்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி காலூன்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் அண்டை நாடான ஜோர்டானின் சில பகுதிகளையும் கைப்பற்றினர். அங்கு டி.வி. மற்றும் இண்டர்நெட் மூலம் அனைத்து வீடுகளுக்கும் ஊடுருவி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் மனதை மாற்றி தங்கள் இயக்கத்தில் சேர்த்தனர்.

இது போன்று தான் தனது மகனும் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்ததாக தனேன் எம்.பி. கூறியுள்ளார். மருத்துவ படிப்பில் சேர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு அங்கிருந்து விலகி ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து விட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எம்.பி. தனது மகனுடன் கடும் வாக்குவாதம் செய்து தீவிரவாத இயக்கத்தில் இருந்து விலகும்படி அறிவுறுத்தினார். அதன் பின்னர் முகமது தனது தந்தையிடம் எதுவும் தெரிவிக்காமல் துருக்கி சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(riz)