இலங்கை ஜப்பானுக்கு ஆதரவு வழங்கும் – பிரதமர்

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ஆசனமொன்றைப் பெறும் ஜப்பானின் முயற்சிக்கு இலங்கை ஆதரவு வழங்குமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். ஜப்பானிய வெளிநாட்டமைச்சர் fபுமியோ கிஷிடாவைச் சந்தித்தபோதே, அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

மேலும், டோக்கியோவில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ஆசிய நாடுகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லையெனவும், இதை நிவர்த்தி செய்வதற்காக ஜப்பானின் முயற்சிக்கு இலங்கை ஆதரவளிக்குமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் உறுதிசெய்வதற்கு, இலங்கையும் ஜப்பானும் பெரியளவிலான பங்கை ஆற்ற வேண்டுமெனவும் பிரதமர் ரணில் மேலும் தெரிவித்தார்.

இவ்வாண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் ஜப்பானால் வழங்கப்பட்ட ஆதரவை இலங்கை மெச்சியதாகக் குறிப்பிட்டிருந்த பிரதமர், இந்த அமர்வுகளில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கிய ஐந்து நாடுகளில் ஜப்பானும் ஒன்று என, மீண்டும் நினைவூட்டினார்.

இலங்கையில் அரசியல் நிலைமை தொடர்பாக ஜப்பான் வெளிநாட்டமைச்சருக்கு விளக்கமளித்த பிரதமர், நல்லாட்சிக்காகவும் ஜனநாயகத்துக்காகவும், இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் ஒன்று சேர்ந்துள்ளன என்ற விடயத்தைக் கோடிட்டுக் காட்டினார்.

புதியதொரு தேசமாக இலங்கையை மாற்றுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை, ஜப்பான் அரசாங்கம் பாராட்டுவதாகத் தெரிவித்த அமைச்சர் கிஷிடோ, சமநிலையான வெளிநாட்டுக் கொள்கையொன்றைப் பின்பற்றுவதற்காக இலங்கையைப் பாராட்டினார்.

இதன்போது, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் துறையில் இலங்கைக்கான ஜப்பானின் ஆதரவை, அமைச்சர் கிஷிடா உறுதிப்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(riz)