CID அதிகாரி நிஷாந்த சில்வாவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்..

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார் உள்ளிட்ட ஊடகவியலாளர்களை துன்புறுத்தியமைத் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேவை நிமித்தம் என்று தெரிவிக்கப்பட்டு, அவர் குற்றப்புலனாய்வு பிரிவிலிருந்து நீர்கொழும்பு பிரிவின் சாதாரண கடமைகளுக்காக இடமாற்றப்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட 60 குற்றங்கள் தொடர்பில் விசார​ணைகள் செய்து, பல சந்தேகநபர்களை கைது செய்தவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை முன்​னெடுத்தவரும் நிஷாந்த சில்வா தலைமையிலான இரகசியப் பொலிஸ் குழு என்பதுடன், கொழும்பில் 11 மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் ஒருவருக்கு பாதுகாப்பு பிரதானியொருவர் பாதுகாப்பு வழங்கியமைக் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் நிஷாந்த சில்வா முன்னெடுத்து வந்தமைக் குறிப்பிடத்தக்கது.