2018ம் ஆண்டின் உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் இன்று(06) ஆரம்பமாகவுள்ள நிலையில், ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று(06) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்ற நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் பகுதிகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(06) அதிகாலை 1.40 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தீபகற்பத்தின் தெற்கு முனையான ஓசர்நோவ்ஸ்கியில் இருந்து 58 மைல் தூரத்தில் கடலுக்கடியில் குறித்த இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாகவும், ரிக்டர் அளவு கோலில் 6.0 அலகாக பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
ரஷ்யாவில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் இருந்து வெகு தொலைவில் இந்த தீபகற்பம் அமைந்துள்ளதால் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.