எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் கட்டாயம் அதிகரிக்கப்படும் என, கனிய வள அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய எரிபொருள் விற்பனையில் கூட்டுத்தாபனத்திற்கு நாளொன்றுக்கு 38 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துச் செல்வதற்கு சமாந்தரமாக, கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் விலையை நிர்ணயம் செய்வதற்கான விலை சூத்திரத்தை அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் எரிபொருள் விலை தற்போது உயர் மட்டத்தில் உள்ளது.
இன்றைய நாளில் ப்ரேன்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67 அமெரிக்க டொலர்களாகவும், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் பீப்பாய் 76 டொலர்களாகவும், டீசல் பீப்பாய் 79 டொலர்களாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தமது எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் விநியோகிக்கும் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 5 ரூபாவாகவும், பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 9 ரூபாவாகவும் அண்மையில் அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#####