Laptop இயக்க தெரியாத அமைச்சர்கள் பதவி நீக்கம்…

இன்னும் ஆறு மாதங்களுக்குள் மடிக்கணினி கற்றுக்கொள்ளாத அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி கூறியுள்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேபாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 2-வது முறையாக பிரதமராக கே.பி. சர்மா ஒளி, பதவியேற்றுள்ளார். அவர் அந்த நாட்டில் அதிரடி திட்டங்களை அமல்படுத்தப்போவதாக கூறி உள்ளார்.

அந்த வகையில் இன்னும் 6 மாதங்களில் பிரதமர் அலுவலகம், காகிதம் பயன்படுத்தாத அலுவலகமாக மாறும் என்றும் எல்லாமே கணினிமயமாகி விடும் என்றும் அறிவித்துள்ளார்.

கூட்டங்கள், ஆலோசனைகள், செயல்திட்டங்கள் என அனைத்துமே மடிக்கணினி மூலமாகவே விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மடிக்கணினியை இயக்குவது எப்படி என்பதை அமைச்சர்கள் தங்கள் உதவியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு விட வேண்டும் என்று பிரதமர் கே.பி. சர்மா ஒளி அறிவுறுத்தி இருக்கிறார்.

மேலும், 6 மாதங்களுக்குள் அமைச்சர்கள் மடிக்கணினியை இயக்க கற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு பதவி நீக்க நேரும் என்றும் அவர் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.