UNP இல் மோதல் நிலை உக்கிரமம் – பல இராஜினாமாக்கலும் கட்சி தாவல்களும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளமையினால், பிளவுகள் ஏற்படும் அபாய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் நிர்வாக மட்டத்தில் பதவி நிலை தொடர்பில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதுடன், 20க்கும் மேற்பட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் ஆட்சிப்பீடத்தில் உள்ள தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில், நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலப்பகுதியினுள் உட்தரப்பில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் உள்ளக மோதல்கள் தற்போது வெளிப்படையாக புலப்பட ஆரம்பித்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியில் 25 வருடத்திற்கும் அதிக காலம் தன்னார்வமாக தங்கள் சேவையை வழங்கிய தொழில் நெறிஞர்கள் பலர் எதிர்வரும் நாட்களுக்குள் இராஜினாமா செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் கட்சியின் சட்டத்துறைச் செயலர் மற்றும் ஒழுங்கு குழு தலைவரும், தொழிற்சபை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் நிஷங்க நாணயக்கார எதிர்வரும் நாட்களுக்குள் அவர் வகிக்கும் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்துகொள்ளவுள்ளார்.

கட்சியில் பல்வேறு பதவிகளில் செயற்படுகின்ற 20க்கும் அதிகமானவர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கட்சியின் தலைவர் உடனடியாக தலையிடவில்லை என்றால் கட்சியின் முழுமையான நிர்வாகத்தில் சரிவு ஏற்படுவதனை தடுக்க முடியாதென தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மூத்த வழக்கறிஞர் நிஷங்க நாணயக்காரவிடம் வினவிய போது, தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் எனவும், அதன் உறுப்பினர்களுக்கு இதுவரையில் எவ்விதமான நிவாரணங்களும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் உறுப்பினர்களுக்கு முகம் கொடுப்பதற்கு சிரமமாக உள்ளமையினால் இராஜினாமா செய்ய தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் சங்கத்தின் தலைவரான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் திலக் மாரப்பன வகித்த பதவியில் நீக்கப்பட்டதனை கண்டுகொள்ளாமல் விடும் நிலைமையின் கீழ் தனது பதவியில் செயற்பட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிஷங்க நாணயக்காரவின் பெயர் மக்கள் வங்கியின் தலைவராக கடந்த பெப்ரவரி மாதம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பிரதமரை விடவும் நிதி அமைச்சர் பலமடைந்துள்ளமையினால் அந்த பதவி உட்பட அவருக்கு கிடைக்கவில்லை.