A/C யினால் ஏற்படும் சரும வறட்சி – பாதுகாக்கும் எளிமையான வழிகள்…

A/C யினால் ஏற்படும் சரும வறட்சி – பாதுகாக்கும் எளிமையான வழிகள்…

ஏசியில் பணியாற்றும் பெண்கள், தங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்ரைசர்கள் பயன்படுத்துவது அவசியம். ஒரு நாளைக்குக் குறைந்து 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமான தண்ணீர் குடித்து உடலை நீர்த்தன்மையுடன் வைத்திருந்தால், சரும வறட்சி, மங்கலாக்கிப் பாதிப்பு ஏற்படுத்துவதில் இருந்து தப்பிக்கலாம்.

உங்கள் சருமத்துக்கு ஏற்ற திரவத்தன்மையுடன் கூடிய லோஷன்களை வைத்திருங்கள். இதனை 2 மணி நேரத்துக்கு ஒருமுறையோ, அல்லது சருமம் உலர்வாகத் தோன்றும் சமயத்திலோ எடுத்து பயன்படுத்துங்கள். ஏசி பயன்பாட்டில் அதிக நேரம் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 6 முறையாவது முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

வாட்டர் ஸ்ப்ரே பாட்டிலில், ரோஸ் வாட்டரை நிரப்பி, வைத்துக்கொள்ளுங்கள். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை முகத்தில் ஸ்ப்ரே செய்துகொண்டால், முகத்தின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும். அல்லது ஆல்ஹாகல் சேர்க்காத ஈரத்தன்மையுடன் கூடிய வைப்ஸ் மூலம் அவ்வப்போது முகத்தில் லேசாகத் துடைத்துக்கொண்டால், புத்துணர்வுடன் வைத்திருக்க முடியும்.

குளிக்கும்போது சில சொட்டு தேங்காய் எண்ணெய்யை நீரில் சேர்த்து குளிக்கலாம். இது, சருமத்தில் எண்ணெய்ப் பசை இருக்க உதவும். அதேபோல, குளிப்பதற்கு முன்பு தயிரை உடம்பில் தடவி, மிதமான வெந்நீரில் குளித்துவந்தால், வறண்ட சருமம் சரியாகிவிடும்.

வாழைப்பழக் கூழுடன் பட்டர் ஃப்ரூட் கலந்து, சருமத்தில் பூசி, ஊறவைத்துக் கழுவுவதன் மூலம் சருமம் மிருதுவாகும்.

நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்போது, இந்த எண்ணெய்யை உடலில் தடவிக்கொள்ளுங்கள்.