(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் (கோப்) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) ஆகியவற்றுக்கான தலைவர் பதவிகளை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
அதன்படி கோப் குழுவின் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பனர் எரான் விக்ரமரட்ன , கோபா குழுவின் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் ஆகியோரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சபாநாயகரிடம் பரிந்துரைத்துள்ளார்.
பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்.
அதற்கமைய இவ்விரு பதவிகளையும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குமாறு எதிர்தரப்பின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்ற அலுவலல்கள் பற்றிய குழுவின் தீர்மானத்திற்கமைய கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் சபையில் குறிப்பிட்டார்.
அரச நிறுவனங்களின் மோசடி மற்றும் செயலாற்றுகை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவது கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் பிரதான கடமையாகும்.
9ஆவது பாராளுமன்றத்தி;ன் 2ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதியால் கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மூன்றாவது கூட்டத்தொடர் கடந்த 3ஆம் திகதி சம்பிரதாய பூர்வமாக ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து கோபா மற்றும் கோபா ஆகிய குழுக்கள் கலைக்கப்பட்டன.இரண்டாவது கூட்டத்தொடரின் கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத்,கோபா குழுவின் தலைவராக போராசிரியர் திஸ்ஸ விதாரன ஆகியோர் பதவி வகித்தனர்.
அத்துடன் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷடி சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.