மஹிந்த ராஜபக்க்ஷ ஜோன்ஸ்டன் ஆகியோருக்கு வேறு சட்டமா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோருக்கு ஒரு சட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு பிறிதொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி தமையகத்தில் இன்று (24) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரில் சிலரை தேர்ந்தெடுத்து கைது செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களை பழிவாங்குவதை விடுத்து அத்தியாவசிய தேவைகளுக்காக போராடும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதரும் ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். கைது செய்து ஆர்ப்பாட்டங்களை முடக்குவதால் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவருக்கு பதில் மேலும் ஐவர் உருவாகுவார்கள்.

அரசாங்கத்தக்கு  எதிராக மக்களுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை முதல் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோருக்கு ஒரு சட்டமும் , காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு பிரிதொரு சட்டமும் அல்ல. அனைவருக்கும் சட்டம் சமமானது. சிறிதளவும் இரக்கம் அற்ற இந்த அரசாங்கம் அனைத்து சுமைகளையும் மக்கள் மீது சுமத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.