மியன்மார் போராட்டம் : ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியது இந்தியா

மியன்மார் போராட்டம் : ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியது இந்தியா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராணுவத்துக்கு பயந்து மியன்மாரில் இருந்து மேலும் பல பொலிசார் மற்றும் பொதுமக்கள் அடைக்கலம் தேடி இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது.

அண்டை நாடான மியன்மாரில் கடந்த மாதம் 1ம் திகதி இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இராணுவத்துக்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக இராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி நடத்துகின்றனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த பதற்றமான சூழலில், மியன்மாரில் இருந்து பொலிசார் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவினர். மியன்மாரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த பொலிஸ்காரர்களை அந்த மாநில பொலிசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, மியன்மார் இராணுவம் இட்ட கட்டளைகளை தாங்கள் நிறைவேற்றாததால், தங்களை இராணுவம் தேடுவதாகவும், எனவே இந்தியாவிடம் அடைக்கலம் பெறுவதற்காக எல்லை தாண்டி வந்ததாகவும் தெரிவித்தனர்.

இராணுவத்துக்கு பயந்து மியன்மார் பொலிசார் இந்தியாவுக்குள் ஊடுருவிய விவகாரம் மிசோரமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மியன்மாரில் இருந்து மேலும் பல பொலிசார் மற்றும் பொதுமக்கள் அடைக்கலம் தேடி இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால், அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக, எல்லைகளில் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.