பாடசாலைகள் இன்று முதல் வழமைக்கு

பாடசாலைகள் இன்று முதல் வழமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில், தரம் ஒன்று முதல் சகல தரங்களுக்கும், இந்த ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்று மீள ஆரம்பமாகியுள்ளன.

இது தொடர்பான விசேட சுற்றறிக்கை கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.

மாகாண பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,

  • தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளை தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் வரையில் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், மாணவர்களை பாடசாலை சூழலுக்கு பழக்கப்படுத்துவதோடு, அவர்களது உளவியல் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பாடசாலைகள் மீள திறக்கப்பட்ட பின்னர், மாணவர்களை பரீட்சைகள் அல்லது போட்டிகளுக்கு வழிநடத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • சமூக இடைவெளியை பேணி கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலான வழிகாட்டல்களும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 15 மாணவர்களை கொண்ட தரங்களில், சகல நாட்களும் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
  • 16 முதல் 30 மாணவர்கள் உள்ள தரங்களை, இரண்டாக பிரித்து வாராந்தம் ஒரு பிரிவினர் என்ற அடிப்படையில், கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
  • 30 க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட தரங்கள், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுவதோடு, சமனான நாட்கள் அளவில், அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் வழமைக்கு திரும்புகின்ற நிலையில், கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் வழமை போன்று பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.