நாடு திரும்புவோரை சமூகத்துக்குள் நுழைய அனுமதி

நாடு திரும்புவோரை சமூகத்துக்குள் நுழைய அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்-19 நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு, நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லையென முடிவுகள் கிடைக்கப் பெற்றால், அவர்கள் சமூகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என, கொவிட்- 19 நோய்த் தொற்றைத் தடுக்கும் தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருகின்ற செயற்றிட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்துரைத்துள்ள அவர், வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்கள், ஏற்கெனவே கொவிட்-19ஐ தடுப்பதற்கான தடுப்பூசியைப் போட்டவர்களாக இருப்பினும், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதன்போது, பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லையென முடிவுகள் கிடைத்தால், அவர்கள் வருகைதந்த 2ஆம் நாள் முதலே, சமூகத்தில் நுழைய முடியும். இருப்பினும் வெளிநாட்டவர்களுக்கு வெவ்வேறு வகையான தடுப்பூசிகள் கிடைப்பெறுகின்றன. ஆகையால், 7ஆவது நாளில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால், அவர்கள் தனிமைப்படுத்தல் பகுதியில் இருந்து வெளியேறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.