டிக்டாக் மீதான தடையை நீக்க உயர் நீதிமன்றம் அனுமதி

டிக்டாக் மீதான தடையை நீக்க உயர் நீதிமன்றம் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | பாகிஸ்தான்) – டிக்டாக் மீதான தடையை நீக்க பெஷாவார் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சமூக வலைதள ஆப்பான டிக்டாக்கிற்கு பாகிஸ்தானில் தடை அமுலில் இருந்தது. இதேபோல இந்தியாவிலும் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிக்டாக் மீதான தடையை நீக்க பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டிக்டாக்கில் வீடியோக்களை ஒழுங்குபடுத்தவும், கண்காணிக்கவும் அந்நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, டிக்டாக் மீதான தடையை நீக்க பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அரசு அளித்துள்ள வரையறைப்படி நிர்வாண வீடியோக்கள், ஆபாச வீடியோக்கள், கடவுளை பழிக்கும் வீடியோக்கள் கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கய்சர் ரஷித் கான், “தவறாக நடந்துகொண்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிந்தால் மக்கள் தவறான வீடியோக்களை பதிவிட மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அக்டோபர் மாதத்தில் டிக்டாக் மீது தடை விதிக்கப்பட்டு 10 நாட்களில் தடை நீக்கப்பட்டது. பின்னர், டிக்டாக்கில் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக எழுந்த முறைப்பாட்டின் பேரில் மீண்டும் மார்ச் 11ஆம் திகதி டிக்டாக் மீது தடை விதிக்கப்பட்டது.