அக்ஷய் குமாருடன் பழகிய 45 பேருக்கு கொரோனா

அக்ஷய் குமாருடன் பழகிய 45 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – அக்ஷய் குமாரை அடுத்து அவர் நடித்து வரும் ராம் சேது படக்குழுவை சேர்ந்த 45 ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

அக்ஷய் குமார் நடித்து வரும் ராம் சேது படக்குழுவை சேர்ந்த 45 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று காலை தெரிய வந்தது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறினார்.

அக்ஷய் குமார் ராம் சேது படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டனர். மும்பை மாத் தீவில் இன்று நடக்கவிருந்த படப்பிடிப்பில் 100 பேர் கலந்துகொள்ளவிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அக்ஷய் குமாரும், படத்தின் தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ராவும் முடிவு செய்தனர். இதையடுத்து 100 ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை செய்யப்பட்ட 100 ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் 45 ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.