மியன்மாருக்கு உதவுங்கள் : மிஸ் மியன்மார் பெண்ணின் உருக்கம்

மியன்மாருக்கு உதவுங்கள் : மிஸ் மியன்மார் பெண்ணின் உருக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | தாய்லாந்து) – தாய்லாந்தில் நடந்த அழகி போட்டியில் மியன்மார் இராணுவத்துக்கு எதிராக இளம்பெண் ஒருவர் பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மியன்மாரில் கடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக அந்நாட்டு இராணுவம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததுடன், புதிய அரசை ஏற்கவும் இராணுவம் மறுப்பு தெரிவித்து வந்தது.

இதனிடையே, மியன்மாரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி 1ஆம் திகதி கவிழ்த்துவிட்டு ஆட்சியை அந்நாட்டு இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. அத்துடன், ஆங் சாங் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

இதையடுத்து, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் போராட்டத்தை ஒடுக்க அடக்கு முறையை இராணுவம் கையாண்டு வருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், தாய்லாந்தில் ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல்’ அழகிப் போட்டி நடைபெற்றது. அதில், மிஸ் மியன்மார் பட்டம் வென்ற, ஹான் லே என்ற இளம்பெண் கலந்து கொண்டு பேசுகையில், “இன்று எனது நாட்டில் பல மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஜனநாயகத்துக்காக மியன்மார் மக்கள் சாலைகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். மியன்மாருக்கு உதவுங்கள். சர்வதேச உதவி மியன்மாருக்கு தற்போது அவசியம் தேவைப்படுகிறது. சிறந்த உலகை உருவாக்குவோம்” என்று கண்ணீருடன் உருக்கமாக பேசினார்.

அவருடைய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், ஒருவித தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மியன்மார் இராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாக ஹான் லே நாடு திரும்பாமல் தாய்லாந்திலே தங்கி இருக்கிறார். நாடு திரும்பினால் சிறை காத்திருக்கிறது என்று தனக்கு மிரட்டல்கள் வருவதாக ஹான் லே தெரிவித்துள்ளார். முன்னதாக, மியன்மார் இராணுவத்துக்கு எதிராக ஹான் லே அந்நாட்டு வீதிகளில் தனது நண்பர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.