வடகொரியாவில் கொரோனா இல்லை

வடகொரியாவில் கொரோனா இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் |  வடகொரியா) – வடகொரியா, தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் எவரும் அதனால் பாதிக்கப்படவில்லையென தொடர்ந்து கூறிவருவது உலக சுகாதார அமைப்பையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய கடந்த ஆண்டிலிருந்து தங்கள் நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் இல்லை என்று தொடர்ந்து கூறி வருகிறது வட கொரியா.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உலக நாடுகளுக்குப் பரவத் தொடங்கியவுடன், வடகொரியா தனது எல்லைகளை மூடியது. சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதித்தது. அரச உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்லும் அரச முறைப் பயணத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தது. எல்லை கடந்து சென்று மீண்டும் நாட்டுக்கு வந்த தனது மக்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி வைத்துக் கண்காணித்தது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்த வடகொரியாவில் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

ஆனாலும், தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இல்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் தொடர்ந்து கூறி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தங்கள் நாட்டு வீரர்களைப் பாதுகாக்கும் நோக்கில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக வடகொரியா கடந்த இரு தினங்களுக்கு முன் அறிவித்தது.

ஐ.நா.விடம் இருந்து வடகொரியா இதுவரை 19 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.