கரோலின் ஜூரி கைது

கரோலின் ஜூரி கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி மற்றும் முன்னாள் மொடல் சூலா பத்மேந்திரா ஆகியோர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் திருமதி இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, கடந்த 04ஆம் திகதி திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளருக்கு வழங்கப்பட்ட மகுடம் சில நொடிகளில் பறிக்கப்பட்டு மற்றுமொருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த போட்டியில் திருமதி புஷ்பிகா டி சில்வா, வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு மகுடம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது, போட்டியில் பங்குப்பற்றுபவர்கள் திருமணமானராக இருக்க வேண்டும் என்றும் விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என விதிமுறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகுடம் சூட்டப்பட்ட திருமதி புஷ்பிகா டி சில்வா, ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர் என்றும் இதனால் போட்டியில் வெற்றி பெற தகுதியற்றவர் என மீண்டும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, திருமதி புஷ்பிகா டி சில்வாவுக்கு சூட்டப்பட்ட மகுடம், மேடையிலேயே மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டாவது இடத்தை பெற்ற திருமதி ருவந்திக்கு சூட்டப்பட்டது.

இந்த நிலையில், புஷ்பிகா விவகாரத்தானவர் என்பதனை நிரூபிப்பதற்கு எவ்வித எழுத்து மூல ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், அவருக்கே இந்த பட்டம் கடந்த 06 ஆம் திகதி மீள வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.