பாகிஸ்தான் பேரீத்தப்பழம் ஏற்றுமதிக்கான விளம்பர நிகழ்வு கொழும்பில்

பாகிஸ்தான் பேரீத்தப்பழம் ஏற்றுமதிக்கான விளம்பர நிகழ்வு கொழும்பில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், பாகிஸ்தானின் வர்த்தக மற்றும் வர்த்தக மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து, பாகிஸ்தான் பேரீத்தப்பழம் ஏற்றுமதிக்கான விளம்பர நிகழ்வை கொழும்பில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்தது.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டாக் கருத்துத் தெரிவிக்கையில் , பன்முகப்படுத்தப்பட்ட சந்தைப்படுத்தல் அணுகுமுறையின் மூலம் பேரீத்தப்பழம் போன்ற பாரம்பரியமற்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் கொள்கையை தெளிவு படுத்தினார். பல ஆரோக்கியமான சுகாதார நன்மைகள் உள்ள பேரீத்தப்பழத்தினை உட்கொள்வதன் முக்கியத்துவத்தையும், இலங்கை இறக்குமதியாளர்கள் மற்றும் வணிகர்கள் உயர் தரமான பேரீத்தப்பழத்தினை நியாயமான விலையில் பெறுவதற்கான முதன்மை இடமாக பாகிஸ்தானைத் தேர்வு செய்யுமாறும் உயர் ஸ்தானிகர் வேண்டிக்கொண்டார்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்பாளார் திருமதி அஸ்மா கமல் உரையாற்றும் போது, பாகிஸ்தானின் பேரீத்தப்பழ உற்பத்தித்துறை மற்றும் அதன் ஏற்றுமதி திறன் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கியதோடு பேரீத்தப்பழ உற்பத்தியில் 540,000 வருடாந்திர உற்பத்தியில் பாகிஸ்தான் 6 வது இடத்தில் உள்ளது என்றும் உலகில் பேரீத்தப்பழ ஏற்றுமதியில் 8 வது இடத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் வர்த்தக மேம்பாட்டு ஆணையம் மற்றும் கொழும்பில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தின் பாகிஸ்தானிய பேரீத்தப்பழ ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை அவர் தெளிவுபடுத்தியதோடு , இதன் விளைவாக 2020 ஆம் ஆண்டில் இலங்கைக்கான ஏற்றுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேரீத்தப்பழ முன்னணி இறக்குமதியாளர்கள் மற்றும் இலங்கையில் வர்த்தக மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். பங்கு பற்றியோர்களுக்கு, உயர்ஸ்தானிகர் பாகிஸ்தான் பேரீத்தப்பழ மாதிரிகளை வழங்கியதோடு, பாகிஸ்தான் பேரீத்தப்பழத்தினால் செய்யப்பட பல்வேறு இனிப்பு பண்டங்களும் வழங்கப்பட்டன.

பங்குபற்றியவர்கள், பாகிஸ்தானின் பேரீத்தப்பழத்தின் சுவை மற்றும் தரத்தினை பெரிதும் பாராட்டினார்.