கோழி இறைச்சிக்கு சந்தையில் தட்டுப்பாடு

கோழி இறைச்சிக்கு சந்தையில் தட்டுப்பாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சந்தைகளில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக புத்தாண்டு கால விருந்துபசாரங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பொதுமக்கள் அசௌகரிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

விநியோகிப்பதற்கு போதுமானளவு கோழி இறைச்சி கிடைக்காமையால், அதனை விற்பனை செய்யும் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“.. இணங்கப்பட்டவாறு புத்தாண்டு காலப்பகுதியில் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்படவில்லை. இதன் காரணமாகவே கோழி இறைச்சிக்கான தடுப்பாடு நிலவுகின்றது.

இந்நிலை தொடருமாயின், நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, கோழி இறைச்சி தொடர்பான புதிய வரத்தமானியை வெளியிடும் நிலை ஏற்படும்..” என இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

பண்டிகை காலத்திற்குப் பிறகு கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்று அனைத்து இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்திருந்தார்.

“.. அரசாங்கம் ஒப்புக் கொண்டபடி மக்காச்சோளம் உத்தரவாத விலையில் வழங்கப்பட்டால் விலை அதிகரிப்பு இருக்காது.

வர்த்தமானி அறிவிப்பின்படி கோழி இறைச்சியின் விலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தோல் உரிக்கப்படாத ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.430 ஆகவும், தோல் உரிக்கப்பட்ட கோழி இறைச்சி ரூ .500 ஆகவும் உள்ளது.

இருப்பினும், விலங்குகளின் தீவனத்திற்கு மக்காச்சோளம் பயன்படுத்தப்படுவதால் அதன் விலைகள் அதிகரித்து செல்வதால், எதிர்காலத்தில் கோழி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு.

கோழிப் பண்ணையாளர்கள் இறைச்சியின் விலையை நிலையாக பராமரிக்க வேண்டுமெனில், அவர்களிற்கு மக்காச்சோளத்தை ரூ .60 க்கு வழங்குமாறு கோரிக்கையினை முன்வைக்கிறேன்..” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.