ஜார்ஜ் ஃப்ளாய்ட் கழுத்தில் கால் வைத்து நசுக்கிய முன்னாள் பொலிசாருக்கு குற்றவாளி என தீர்ப்பு

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கழுத்தில் கால் வைத்து நசுக்கிய முன்னாள் பொலிசாருக்கு குற்றவாளி என தீர்ப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |  வொஷிங்டன்) – ஆப்பிரிக்கா – அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த ஆண்டு மின்னியாபோலிஸ் நகரத்தில் கைது செய்ய்யப்பட்டபோது உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி குற்றவாளி என்று இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

சென்ற ஆண்டு மே மாதம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைது செய்யப்பட்ட போது, தற்போது 45 வயதாகும் முன்னாள் காவல் அதிகாரி டெரெக் சாவின், ஃப்ளாய்டின் கழுத்தில் ஒன்பது நிமிடங்களுக்கும் மேல் முழங்காலை வைத்து அழுத்தியது படம்பிடிக்கப்பட்டது.

மிகவும் பரவலாக பகிரப்பட்ட இந்தக் காணொளி இனவெறிக்கு எதிராகவும் காவல்துறை அத்துமீறல்களுக்கு எதிராகவும் உலகம் முழுவதும் போராட்டங்களைத் தூண்டியது.

இரண்டாம் நிலை கொலை, மூன்றாம் நிலை கொலை குற்றம் மற்றும் மனிதக் கொலை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் டெரெக் சாவின் குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் வரை அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டு இருப்பார்.

இவர் பல தசாப்தங்களை சிறையிலேயே கழிக்க வேண்டியிருக்கும். டெரெக் சாவின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வழக்குக்குக்கு கிடைத்த அதீத ஊடக வெளிச்சம் காரணமாக அரசுத் தரப்பு நீதிபதிகள் குழு மீது தாக்கம் செலுத்தி இருக்கலாம் என்ற வாதத்தின் அடிப்படையில் டெரெக் சாவின் தரப்பில் மேல் முறையீடு செய்யப்படலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.