இலங்கை சுற்றுப்பயணம் : பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை

இலங்கை சுற்றுப்பயணம் : பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் |  சென்னன) – இலங்கை சுற்றுப் பயணம் குறித்துப் பேசிய பயிற்சியாளர் ராகுல் திராவிட், இளம் வீரர்களை குஷிப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

விராட் கோலி, பும்ரா போன்ற மூத்த வீரர்களைக் கொண்ட இந்திய அணி செப்டம்பர் 14ஆம் திகதி வரை இங்கிலாந்தில் தங்கி கிரிக்கெட் விளையாடும் அதேவேளையில், ஐபிஎலில் சிறப்பாக சோபித்த இளம் வீரர்களை கொண்ட இளம் இந்திய அணி ஜூலை மாதம் இலங்கை சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது.

இதற்கான திகதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. ஒரு போட்டிகள் ஜூலை 13, 16, 18 ஆகிய திகதிகளிலும், அதனைத் தொடர்ந்து டி20 தொடர் ஜூலை 21, 23, 25 ஆகிய திகதிகளிலும், நடைபெறும். மேலும், தற்போது இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கேப்டனாக ஷிகர் தவன் செயல்படுவார் என்றும், பயிற்சியாளராக ராகுல் திராவிட் இருப்பார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை சுற்றுப் பயணம் குறித்து, பத்திரிகை ஒன்றுக்கு திராவிட் பேட்டி கொடுத்துள்ளார். அதில், “நான் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது, ஒரு தொடரில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறேன். யாரும் விளையாடாமல் இருக்க மாட்டார்கள். அணியில் இடம் கிடைத்து, XI அணியில் இடம் கிடைக்கவில்லை என்றால் அது மிகவும் மோசமான விஷயம். இதனால், முடிந்தவரை அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய திராவிட், “ஒரு பேட்ஸ்மேன், ஒரு சீசனில் 800 ரன்களை வரை அடித்து இந்திய அணிக்குத் தேர்வாகி விடுகிறார். இருப்பினும், திறமையை நிரூபிக்க அவருக்கு XI அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் மீண்டும் அடுத்த சீசனில் அதே 800 ரன்கள் அடித்தால் மட்டுமே மீண்டும் அணியில் இடம் கிடைக்கிறது. இதனால்தான் ஒரு கிரிக்கெட் தொடரில் அனைத்து வீரர்களுக்கும் XI அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” எனக் கூறினார்.

இதன்மூலம், இலங்கை சுற்றுப் பயணத்தின்போது அனைத்து வீரர்களும் நிச்சயம் களமிறங்குவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இளம் வீரர்கள் தேவ்தத் படிக்கல், சேத்தேன் சகார்யா போன்றவர்களுக்கு உண்மையில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்திதான்.