சானியாவை மிஞ்சுமா அங்கிதா ரெய்னா

சானியாவை மிஞ்சுமா அங்கிதா ரெய்னா

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) –  இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இதுவரை தனது டென்னிஸ் வாழ்க்கையில், ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அவற்றில் மூன்று இரட்டையர் பிரிவிலும், மூன்று இரு பாலர் இரட்டையர் பிரிவிலும் அவருக்குக்கிடைத்தன.

மகளிர் டென்னிஸ் தரவரிசையில், அவர் இரட்டையர் பிரிவில் முதலிடத்தையும், ஒற்றையர் பிரிவில் 27 வது இடத்தையும் அடைந்துள்ளார். இது தவிர அவர் 40 க்கும் மேற்பட்ட பட்டங்களை கைப்பற்றியிருக்கிறார். ஆனால் இன்றும் அவர் தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்திற்காக காத்திருக்கிறார்.

34 வயதான சானியா மிர்சாவின் நான்காவது மற்றும் கடைசி ஒலிம்பிக்காக இது இருக்கக்கூடும். இதில் பங்கேற்பது குறித்து சானியா மிகவும் உற்சாகமாக உள்ளார்.

“நான் ஒலிம்பிக்கில் மூன்று முறை விளையாடியது என் அதிர்ஷ்டம். இது எனது நான்காவது ஒலிம்பிக்காக இருக்கும். தாயான பிறகு ஒலிம்பிக்கில் விளையாடவேண்டும் என்பது எனது கனவு.”என்று சானியா குறிப்பிடுகிறார்.

டோக்கியோவில் அங்கிதா ரெய்னாவுடன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா விளையாட உள்ளார். சானியா மிர்சா ஒன்பதாவது இடத்தையும், அங்கிதா ரெய்னா 95 வது இடத்தையும் பெற்று டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றனர். இது, 28 வயதான அங்கிதா ரெய்னாவின் முதல் ஒலிம்பிக் ஆகும்.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் பிறந்த அங்கிதா ரெய்னா தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் மகளிர் ஒற்றையர் வீரர் ஆவார்.

2018 ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். டோக்கியோவுக்கு முன்பு, அங்கிதா ரெய்னா விம்பிள்டனில் பங்கேற்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் தோல்வியடைந்த பின்னர் அவர் போட்டியிலிருந்து வெளியேறினார்.

“சானியா மிர்சாவும் நானும் சேர்ந்து நாட்டிற்காக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கத்தைப் பெற விரும்புகிறோம்,” என அங்கிதா ரெய்னா மேலும் தெரிவித்துள்ளார்.