எரிவாயு தட்டுப்பாட்டில் தீர்வு வழங்க கோரிக்கை

எரிவாயு தட்டுப்பாட்டில் தீர்வு வழங்க கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளமையினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச தலைமை வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியினரால், கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் கோரப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் பிரசார செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இந்த விடயம் குறித்து இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

நாட்டின் சந்தையில் 20 – 25 சதவீதமாக உள்ள லாஃப்ஸ் எரிவாயுவை பயன்படுத்தும் 20 இலட்சம் நுகர்வோர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரையில் இராஜாங்க அமைச்சுக்கு கீழ் இயங்கும் நுகர்வோர் அதிகார சபையினால் குறித்த நிறுவனத்திற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சகல காரணிகளையும் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு தேசிய சுதந்திர முன்னணி கோரியுள்ளது.