நியூசிலாந்து வீரர்களுக்கு இந்தியாவில் இருந்து கொலைமிரட்டல் – பாகிஸ்தான்

நியூசிலாந்து வீரர்களுக்கு இந்தியாவில் இருந்து கொலைமிரட்டல் – பாகிஸ்தான்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தங்கள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்தியாவில் இருந்து கொலைமிரட்டல் வந்ததாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் களம் இறங்காமலேயே நியூசிலாந்து அணியினர் நாடு திரும்பியுள்ளனர்.

நியூசிலாந்து அணி கடைசி நேரத்தில் தொடரை ரத்து செய்ததை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், மற்றும் நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதனையடுத்தே, பாகிஸ்தான் தொடரை நியூசிலாந்து ரத்து செய்ததற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.

கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டிற்கு வந்த போதும், வருவதற்கு முன்னரும் நியூசிலாந்து வீரர்களுக்கு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவை இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலின் மனைவிக்கும் மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பவாத் சவுதரி செய்தியாளர்களிடம் கருத்துரைக்கையில்,

நியூசிலாந்து வீரர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. விபிஎன் செயலியின் மூலம் இந்த இமெயில் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டது போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அந்த மின்னஞ்சல்களில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லக்கூடாது. அங்கு அவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தானிய அமைச்சர் பவாத் சவுதரி கூறினார்.