ஈராக் நாடாளுமன்றத் தேர்தலும் மிகக் குறைந்த வாக்குப் பதிவுகளும்

ஈராக் நாடாளுமன்றத் தேர்தலும் மிகக் குறைந்த வாக்குப் பதிவுகளும்

(ஃபாஸ்ட் நியூஸ் | ஈராக் ) –  அமெரிக்கா தலைமையிலான 2003ஆம் ஆண்டு படையெடுப்பைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட ஜனநாயக முறைக்கு ஆதரவு குறைந்து வரும் நிலையில், ஈராக்கின் நாடாளுமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பதிவாகியுள்ளன.

திட்டமிட்டதைவிட ஓராண்டுக்கு முன்னரே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தலில், 11 மணிநேர வாக்கெடுப்பைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது.

ஈராக்கிய தேர்தல் ஆணையத்தின்படி, சுமார் 41 சதவீத வாக்காளர்களே வாக்களித்தனர்.

நீண்டகால ஆட்சியாளர் சதாம் ஹுசைன் 2003இல் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஐந்து தேர்தல்களில் மிகக் குறைந்த வாக்கு எண்ணிக்கையைக் இது குறிக்கிறது.

முந்தைய குறைந்தபட்சம் 2018இல் பதிவு செய்யப்பட்டது. அப்போது 44.5 சதவீத தகுதிவாய்ந்த வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளிக்க முன்வந்தனர்.

ஈராக்கின் தேர்தலை மேற்பார்வையிடும் சுயாதீன அமைப்பின் படி, அடுத்த 48 மணி நேரத்திற்குள் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஆனால் அரசாங்கத்தை அமைக்கும் பணியை ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வாரங்கள் அல்லது மாதங்கள் வரை இழுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராக்கின் தெற்கு மாகாணங்களில், ஊழலுக்கு எதிராகவும் அரசியல் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் பொதுமக்கள் கடந்த 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

போராட்டத்தை அடக்க அரசாங்கம், அடக்குமுறையைக் கையாண்டதால் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக பல போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.