“இலங்கையில் காணப்படும் பாகிஸ்தானின் பெளத்த சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்”

“இலங்கையில் காணப்படும் பாகிஸ்தானின் பெளத்த சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்”

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் வர்த்தக மேம்பாட்டு ஆணையத்துடன் (TDAP) இணைந்து கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் “இலங்கையில் காணப்படும் பாகிஸ்தானின் பெளத்த சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” ” என்ற தொனிப்பொருளில் ஒக்டோபர் 12, 2021 ம் திகதி இணையதள கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையில் பாகிஸ்தானின் பெளத்த பாரம்பரியத்தை ஊக்குவிப்பதும், இரு தரப்பிலும் உள்ள பயண முகவர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்களுக்கு இடையில் இலங்கையில் பாகிஸ்தானின் பெளத்த சுற்றுலாவின் சாத்தியப்பாட்டை ஆராயும் ஒரு தளத்தை வழங்குவதுமே இவ்விணையதள கலந்துரையாடலின் நோக்கமாகும்.

இலங்கையில் பாகிஸ்தானின் பதில்உயர்ஸ்தானிகர் திரு. தன்வீர் அஹ்மத், பாகிஸ்தானின் வளமான காந்தார பாரம்பரியத்தையும், பெளத்த மற்றும் மத சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான பாகிஸ்தான் அரசாங்கத்தின் முயற்சிகளை குறிப்பிட்டதோடு, பாகிஸ்தானின் பெளத்த சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக உயர்ஸ்தானிகராலயத்தின் பல்வேறு முயற்சிகள் குறித்தும் குறிப்பாக,பாகிஸ்தானில் உள்ள பெளத்த பாரம்பரியத்தை உள்ளடக்கிய ஒரு கலை ஆவணப்படம் இலங்கை பிரதமரினால் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறினார். இந்த ஆவணப்படமானது, குறிப்பாக இலங்கையில் இருந்தும் பொதுவாக உலக பெளத்த மக்களிடம் இருந்தும் மத சுற்றுலாவிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என நம்பப்படுகிறது.

கொழும்பு கங்காராமாயா விகாரையின் பிரதம தேரர் கலாநிதி கிரிண்டே அசாஜி தேரர் கருதத்துத்தெரிவிக்கும் போது “இலங்கையில் பாகிஸ்தானின் பெளத்த சுற்றுலா துறையை ஊக்குவிப்பதை வரவேற்றதுடன், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கான உயர்மட்ட பெளத்த மதகுருக்கள் தூதுக்குழுவின் பாகிஸ்தான் விஜயத்தின் போது அவரது மறக்கமுடியாத பயண அணுபவத்தையும் நினைவுபடுத்தினார். மேலும்,பெளத்த பாரம்பரியத்தை பாதுகாப்பதில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் முயற்சிகளை சுட்டிக்காட்டிய அவர், பாகிஸ்தான் இலங்கையின் பெளத்த சுற்றுலா பயணிகளுக்கான ஒரு நவீன, தனித்துவமான இடமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் வர்த்தக மற்றும் முதலீட்டு ஆலோசகர் திருமதி அஸ்மா கமல், இலங்கையில் பாகிஸ்தானின் பெளத்த சுற்றுலாவின் சாத்தியப்பாட்டின் பகுப்பாய்வு அறிக்கையை விளக்கியதோடு, இலங்கையில் உள்ள பெளத்த சுற்றுலாவின் போக்கினை விளக்கிய அவர், இரு நாடுகளுக்கிடையிலான வணிக தொடர்புகளை ஊக்குவிக்கவும் , பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான சுற்றுலாத்துறை வளர்ச்சியில் நடவடிக்கைகள் குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு விளக்கப்படுத்தினார்.

இக்கலந்துரையாடலில், பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 65 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். பாகிஸ்தான் வர்த்தக அபிவிருத்தி கூட்டுத்தாபனம் (PTDC), பாகிஸ்தான் டூர் ஆபரேட்டர்கள் அசோசியேஷன் (PATO), பாகிஸ்தான் டிராவல் ஏஜென்ட்ஸ் அசோசியேஷன் (TAAP) மற்றும் பல சுற்றுலாத்துறை நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உயர் வர்த்தக மற்றும் முதலீட்டு துறைகளை மையமாகக் கொண்ட இணையதள கலந்துரையாடல் தொடரின் ஒரு பகுதியாக இந்த இணையதள கலந்துரையாடல், பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.