பஃப் டூ ப்ளெசிஸுக்கு LPL வாய்ப்பு

பஃப் டூ ப்ளெசிஸுக்கு LPL வாய்ப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றிக்கிண்ணத்தை உரித்தாக்கி நேற்றைய தினம் நிறைவடைந்த இந்திய ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் பஃப் டூ ப்ளெசிஸ் (தென் ஆபிரிக்கா) ஆட்டநாயகனாக தெரிவானார்.

நேற்றைய இறுதிப்போட்டியில் அவர் கொல்கத்தா அணிக்கு எதிராக 59 பந்துகளில் 86 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில், எதிர்வரும் டிசம்பரில் ஆரம்பமாகவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்காக ஜஃப்னா கிங்ஸ் அணியில் இடம்பெறும் வெளிநாட்டு வீரர்களுள் ஒருவராக பஃப் டூ ப்ளெசிஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பஃப் டூ ப்ளெசிஸ் இம்முறை இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் அதிகமான மொத்த ஓட்டங்களைப் பெற்ற துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் 633 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு20 தொடருக்கான வீரர்களை தெரிவுசெய்யும் ஏலத்துக்கு முன்னதாக வெளிநாட்டு வீரர்கள் இருவரை தேர்ந்தெடுக்க அணி உரிமையாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் ஒரு அணிக்காக 5 வெளிநாட்டு வீரர்களை மாத்திரம் ஏலத்தில் எடுக்கவேண்டுமென ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிபந்தனை விதித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது.