ஆப்கன் சிறுமிகளுக்காக மலாலா குரல்

ஆப்கன் சிறுமிகளுக்காக மலாலா குரல்

(ஃபாஸ்ட் நியூஸ் | ஆப்கானிஸ்தான்) – ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மீண்டும் கல்வி கற்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் என்று மலாலா வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்டன. பெண் குழந்தைகளுக்குக் கல்வி உட்படப் பல தடைகள் ஆப்கனில் விதிக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவது குறித்து சர்வதேச அளவில் தொடர் கண்டனங்களைத் தலைவர்கள் பலர் தலிபான்களுக்குத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற மலாலாவும், ஆப்கன் பெண்களின் கல்வி சார்ந்து தொடர் கோரிக்கைகளை வைத்து வருகிறார்.

மலாலா வெளியிட்ட அறிக்கையில், “பெண்களின் கல்வி மறுக்கப்படுவதை எந்த மதமும் அனுமதிக்காது. ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மீண்டும் கல்வி கற்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டும். தடையைத் திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆப்கனில் இயங்கும் பெண் அமைப்புகளும், பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.