“நீதியை அடைவதில் உதவிய IPU அமைப்பிற்கு நன்றி” – ரிஷாத்

“நீதியை அடைவதில் உதவிய IPU அமைப்பிற்கு நன்றி” – ரிஷாத்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடந்த 14ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தனது விடுதலைக்கு எல்லா வழிகளிலும் உதவிய மக்களுக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களுக்கும் நடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தனது நன்றியினை தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் விடுதலைக்கு IPU அமைப்பு தனது மகிழ்ச்சியினை தெரிவித்திருந்தது.

IPU என்பது தேசிய பாராளுமன்றங்களின் உலகளாவிய அமைப்பாகும். ஜனநாயகம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு சமாதானத்தை ஊக்குவிக்க நாடாளுமன்றங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அமைப்பாக இந்த அமைப்பு விளங்குகிறது.

IPU அமைப்பின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இறுதியாக பிணையில் விடுவிக்கப்பட்டதில் #IPU மகிழ்ச்சி அடைகிறது. IPU அவரது விசாரணையை உன்னிப்பாகக் கண்காணிக்கும்..” எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த டுவிட்டர் மகிழ்ச்சி செய்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பதிலளிக்கையில்;

“எனது வழக்கை தொடர்ந்து கண்காணிப்பதற்காகவும், நீதியை அடைவதில் நீங்கள் எனக்கு வழங்கிய உதவிக்காகவும், இலங்கை உட்பட 179 உறுப்பு நாடுகளின் உலகளாவிய அமைப்பான IPU அமைப்பிற்கு நன்றி..” எனத் தெரிவித்துள்ளார்.

 

  • ஆர்.ரிஷ்மா