இலங்கையில் காஷ்மீர் கறுப்பு தினம் அனுஷ்டிப்பு

இலங்கையில் காஷ்மீர் கறுப்பு தினம் அனுஷ்டிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி  ‘காஷ்மீர் கறுப்பு தினத்தை’ குறிக்கும் வகையில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

மாலைத்தீவு அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகரும் சிங்கப்பூர் ஆசிய பசுபிக் எலைட் தொழில்முனைவோர் சங்கத்தின் ஆலோசகருமான கலாநிதி அசேல விக்கிரமசிங்க, இலங்கை பாகிஸ்தான் நட்புறவு சங்கத்தின் தலைவர் இப்திகார் அஸீஸ்,  அரசியல் செயற்பாட்டாளரும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஷிராஸ் யூனுஸ், திருமதி சூரிய ரிஸ்வி ஆகியோர் இக்கருத்தரங்கில் உரை நிகழ்த்தினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய அட்டூழியங்களையும், இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் அப்பாவி காஷ்மீரிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதையும் இவர்கள் தமது உரைகளில் சுட்டிக்காட்டினர்.

பாகிஸ்தானின் பதில் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமது உரையாற்றுகையில்;

பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு ,இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயமான போராட்டத்தில் பாகிஸ்தான் தனது அர்ப்பணிப்பையும் ஆதரவையும் தொடர்ந்தும் வழங்கும் என குறிப்பிட்டார்.

காஷ்மீர் மக்களின் நிரந்தர துயரங்களை நோக்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப காஷ்மீர் பிரச்சனைக்கு ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் அடிப்படையில் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை  வலியுறுத்துவதாகவும் இக்கருத்தரங்கின் நோக்கத்தை அவர் விளக்கினார்.

கடந்த ஏழு தசாப்தங்களாக இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் இந்தியா சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரில்  செய்த மனித உரிமை மீறல்களை அவர் கண்டித்ததோடு, காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப காஷ்மீரில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய உலக நாடுகளும்  கடமைப்பட்டுள்ளது  எனக்குறிப்பிட்டர்.

காஷ்மீர் பிரச்சினையை முதலில் ஐ.நா.விடம் இந்தியா கொண்டு சென்றதை  நினைவு கூர்ந்த அவர், இருப்பினும், கடந்த 72 ஆண்டுகளாக ஐ.நா தீர்மானங்களை செயல்படுத்துவதில் இந்தியா தயக்கம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டர்.

இறுதியாக , இந்திய அரசு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளும் சட்டவிரோத மற்றும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தி விரிவான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் வெளிநாட்டு தூதுவர்கள், தொழில் வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், காஷ்மீரின் இலங்கை வாழ் ஆதாரவாளர்கள் மற்றும் பாகிஸ்தான் சமூகத்தினர் என பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.