லாஃப் விலையினை 4,000 ரூபா வரை அதிகரிக்க திட்டம்

லாஃப் விலையினை 4,000 ரூபா வரை அதிகரிக்க திட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையை 4,000 ரூபா வரை அதிகரிப்பதே லாஃப் சமையல் எரிவாயு விநியோக நிறுவனத்தின் நோக்கம் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தற்போது நாட்டில் லாஃப் ரக சமையல் சிலின்டரை பெற்றுக் கொள்வதில் நுகர்வோர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில் ஒருசில பிரதேசங்களில் லிட்ரோ ரக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு காணப்படுகிறது.

எனினும் லிட்ரோ சிலிண்டர் எதிர்வரும் வாரம் முதல் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. லாஃப் ரக சமையல் எரிவாயுவின் விலை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டவாறே உள்ள நிலையில் மீண்டும் விலையை அதிகரிக்க லாஃப் நிறுவனத்தினர் நுகர்வோர் அதிகார சபையிடம் வலியுறுத்தியுள்ளனர்.

அதோடு விற்பனை விலையை கட்டம் கட்டமாக 4000 ரூபா வரை அதிகரிக்க லாஃப் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் நிலை தற்போது காணப்படுகிறதாகவும் குறிப்பிட்ட அவர், அதன் காரணமாகவே லாஃப் நிறுவனம் சிலிண்டர் விநியோகத்தை தற்போது மட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.