நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் அனுஷ்கா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் அனுஷ்கா

(ஃபாஸ்ட் நியூஸ் |  சென்னை) – மகேஷ் பாபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. 2006ஆம் ஆண்டு மாதவன் நடித்த ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து ‘வேட்டைக்காரன்’,‘சிங்கம்’, ‘என்னை அறிந்தால்’, ‘லிங்கா’ என ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்தார். நாயகியை மையமாகக் கொண்டு இவர் நடித்த ‘அருந்ததீ’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ 1 மற்றும் 2 ஆகிய படங்களில் அனுஷ்காவின் கதாபாத்திரம் பேசப்பட்டது. எனினும் அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படவாய்ப்புகள் அனுஷ்காவுக்கு வரவில்லை.

2019ஆம் ஆண்டு வெளியான ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் ஒரு கவுரவ வேடத்தில் தோன்றியிருந்தார். இதுவே அனுஷ்கா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம். அதன் பிறகு 2020ஆம் ஆண்டு அனுஷ்கா நடித்த ‘நிசப்தம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.

இந்நிலையில் தற்போது இயக்குநர் மகேஷ் பாபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தை ‘சாஹோ’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ படங்களை தயாரித்து வரும் யுவி க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.