“காந்தாரா” : ஆவணப்படம்

“காந்தாரா” : ஆவணப்படம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – “காந்தாரா” ஆனது, இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், சித்திவிநாயக் சினி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் உடன் இணைந்து, இலங்கை புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ஆதரவுடனும் ஒருங்கிணைப்புடனும் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படமாகும்.

இவ்வாவணப்படமானது, பாகிஸ்தானின் காந்தார பௌத்த பாரம்பரிய தளங்களை நேரடியாக பார்ப்பது போன்ற ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

இவ்வாவணப்படமானது, இன்று (நவம்பர் 16) அலரிமாளிகையில் கெளரவ இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால், வணக்கத்திற்குரிய பௌத்த பிக்குகள், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பௌத்த நாடுகளின் தூதுவர்கள் மற்றும் வர்த்தக, சுற்றுலா மற்றும் ஊடகத்துறையினர் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

காந்தாரா பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் பல் எச்சங்கலிள் ஒன்று பாகிஸ்தானில் உள்ள தக்ஷிலா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. காந்தார பௌத்த நாகரீகம் கி.பி 1 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 7 ஆம் நூற்றாண்டு வரை அதன் பெருமையின் உச்சத்தை எட்டிய பகுதி இதுவாகும். புத்தரின் முதல் மானுடவியல் சிலையானது, இப்போது பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் பகுதியில் உருவாக்கப்பட்டதாகும்.

பாகிஸ்தானில் உள்ள தக்ஷிலா பிரதேசமானது, உலகின் பழமையான பௌத்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும், 12 ஆம் நூற்றாண்டில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் புனிதமான புத்த கலைப்பொருட்களின் தாயகமாகவும் அறியப்படுகிறது. மேலும், அநுராதபுரத்தில் உள்ள புனித போதி மரத்திலிருந்து, பாகிஸ்தான் அரசுக்கு இலங்கை அரசு பரிசாக வழங்கிய ஒரு மரக்கன்றானது, தக்ஷிலா அருங்காட்சியகத்தின் தோட்டங்களில் இன்றும் வளர்வது குறிப்பிடத்தக்கது.

இந்த பெளத்த பாரம்பரியத்தை பொதுவாக பௌத்த உலகிற்கும், குறிப்பாக இலங்கை நாட்டுக்கும் வழங்குவதற்காக, “காந்தாரா : பாகிஸ்தானின் பெளத்த பாரம்பரியம்” என்ற ஆவணப்பட யோசனை தோன்றியதோடு, இது இலங்கை பிரதமர் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர், அதிமேதகு, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் மேதகு இம்ரான் கான் ஆகியோரின் ஆசியுடன் தொடங்கப்பட்டது.

இந்த ஆவணப்படமானது, மதச் சுற்றுலா துறையில், பல்வேறுபட்ட புதிய சாத்திப்பாடுகளை ஏற்படுத்திடும் அதே வேளை, சகோதர நாடுகளான இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் வழியமைக்கும்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன், இயக்குனர் திரு.மதீன் சஹேராய் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் திரு. சஜ்ஜாத் முஹம்மத் (கேட்வே டு புரொடக்ஷன், இங்கிலாந்து) உள்ளிட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் படத்திற்கு தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இவ்வாவணப்படமானது, வரலாற்று இடிபாடுகள் மற்றும் தொல்பொருள்களை யதார்த்தமான முறையில் சித்தரிக்கும் அதே வேளை, பின்னணி வரலாற்றுத் தகவல்களையும் சித்தரிக்கும் திரைக்கதையை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படமாகும். இத்திட்டத்தின் சிரேஷ்ட ஆலோசகர் வணக்கத்துக்குரிய அக்ரஹேர கஸ்ஸப தேரர் ஆவார். திட்ட ஆலோசகர், பணிப்பாளர் வித்யாஜோதி பேராசிரியர் நிமல் சில்வாவினால், இவ்வாவணப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை சித்திவிநாயக் சினி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிறுவனமானது, சர்வதேச திரைப்பட தயாரிப்பு, சந்தைப்படுத்துதல், விநியோகம் மற்றும் காட்சிப்படுத்துதல் போன்றவற்றிக்கு பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். ஒலி மற்றும் திரைப்பட தொகுப்பாக்கம் உள்ளூர் கலைஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சித்திவிநாயக் சினி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் தலைமை அதிகாரி திருமதி கௌசல்யா விக்கிரமசிங்க, “இத்திரைப்படம் உள்ளூர் திரையரங்குகளிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து திரையிடப்பட எதிர்பார்க்கப்படுகிறது” என குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் பதில் உயர் ஸ்தானிகர் திரு.தன்வீர் , “ இலங்கை மற்றும் பாகிஸ்தான் மக்களை அவர்களது பகிரப்பட்ட வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் மூலம் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இந்த “காந்தாரா” ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த பாகிஸ்தானில் உள்ள புனித பௌத்த தளங்களுக்கான தனது விஜயத்தை நினைவு கூர்ந்த கங்காராமய விகாரையின் பிரதம தேரர் வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் அவர்கள், ஆவணப்படத்தின் வெற்றிக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் மேலும் வலுப்பெறவும் தமது ஆசியினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.