தாலிபான்கள் ஆட்சியில் குழந்தைகளை விற்கும் அவலம்

தாலிபான்கள் ஆட்சியில் குழந்தைகளை விற்கும் அவலம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  காபூல்) – ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் குழந்தைகளை விற்பது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து அங்கு மீண்டும் தாலிபான் அமைப்பு ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சிக்கு வந்தது முதல் ஆப்கனின் அனைத்து சட்ட அமைப்புகளிலும் தாலிபான் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தை கலைத்ததுடன், பள்ளி, கல்லூரிகளில் பெண்கள், ஆண்கள் ஒன்றாக படிப்பதற்கு தடை, பெண்கள் இடம்பெறும் விளம்பரங்கள், டிவி தொடர்கள் ஒளிபரப்ப தடை என பல்வேறு தடைகள்.

தடைகளை விதிப்பதை மட்டுமே தாலிபான் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் பொருளாதாரரீதியாக ஆப்கானிஸ்தான் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆப்கானில் உள்ள ஏழை மக்கள் உணவுக்கே திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச சமூக நல அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உணவு வாங்க கூட பணம் இல்லாததால் ஒருவர் தனது 10 வயது பெண் குழந்தையை இன்னொருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காக விற்று, அந்த காசில் மற்ற குழந்தைகளுக்கு உணவளித்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாலிபான் வருகைக்கு பிறகு ஆப்கானில் பொருளாதாரம் சீர்குலைந்து 32 லட்சம் குழந்தைகள் சரியான உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.