குருந்தூரில் புத்தர் சிலை நிறுவுதல் தடுத்து நிறுத்தம்

குருந்தூரில் புத்தர் சிலை நிறுவுதல் தடுத்து நிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்துக்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமாக இன்று (12) முன்னெடுக்கப்பட்ட முயற்சி, தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.

குருந்தூர் மலை தொடர்பில் ஏற்கெனவே முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று, குருந்தூர்மலையில் எவ்வித மதக் கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவினை மீறி அங்கு தொல்பொருள் அகழ்வாராட்சி என்னும் போர்வையில் புதிதாக பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவ்வாறு அமைக்கப்பட்ட புதிய விகாரைக்குரிய விசேட பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கும், ‘கபோக்’ கல்லினால் ஆன புத்தர் சிலை ஒன்றினை குருந்தூர் மலையில் நிறுவுவதற்கும் பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச் சார்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள் ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இந்த விசேட வழிபாடுகளுக்கு தென்னிலங்கையில் இருந்து  பெருந்திரளான பெரும்பான்மை இனத்தவர்களும் பௌத்த பிக்குகளும் அதி சொகுசுவாகனங்கள் மற்றும் பஸ்கள் மூலம் வருகைதந்திருந்தனர்.

தொடர்ந்து குறித்த பகுதிக்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க வருகைதந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன், குருந்தூர் மலையையும் பார்வையிட்டிருந்தார்.

அதன்போது கருத்துத் தெரிவித்த அனுரமானதுங்க, குருந்தூர்மலைப் பகுதியில் தொல்லியல் ஆய்வின்மூலம் கிடைத்த எச்சங்களை பேணிப் பாதுகாப்பதற்காக புனர்நிர்மாணம் செய்யும் வேலைகளையே தாம் முன்னெடுப்பதாகவும், அங்கு புதிதாக கட்டடங்கள் எதனையும் தாம் கட்டவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்தோடு தமது திணைக்களத்துக்கும், பௌத் துறவிகளுக்கும் இராணுவத்துக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, இதன்போது குருந்தூர் மலையைச்சூழ உள்ள வயல்நிலங்கள் தொல்லியல் இடமெனக்கூறி, பௌத்தபிக்கு தமிழ் மக்களைத் தடுப்பது தொடர்பிலும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அவ்வாறு பௌத்த பிக்குகள் தடுப்பதற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என அவர் அதற்குப் பதிலளித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த விசேட வழிபாட்டு முயற்சிகள் நிறுத்தப்பட்டது.

அந்தவகையில்  முன்னெடுக்கப்பட்ட விசேட வழிபாடுகளுக்கான முயற்சிகள் நிறுத்தப்பட்டதுடன், பிறிதொருநாளில் இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள், தமிழ் மக்கள், இதனோடு தொடர்புடைய திணைக்களங்கள், அமைச்சர் உள்ளிட்டவர்களுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.