மக்கள் பல நாட்களாக காத்திருக்க இடையில் புகுந்து அரசியவாதி அட்டூழியம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கண்டி- குருநாகல் வீதியில் அலதெனியா மற்றும் ஹேதெனிய ஆகிய பிரதேசங்களில் உள்ள இரண்டு எரிபொருள் நிலையங்களில் மக்கள் பல நாட்கள் காத்திருந்தாலும் அந்த பிரதேசத்தின் அரசியல்வாதியொவருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அங்கு காத்திருந்த மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மக்கள் எத்தனை பேர் வரிசைகளில் காத்திருந்தாலும் அந்த அரசியல்வாதியின் பஸ் மற்றும் காருக்கு எவ்வித கட்டுபாடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அரசியல்வாதி பல போக்குவரத்து பஸ்களுக்கு சொந்தக்காரர் என்றும் குறித்த பஸ்கள் குருநாகல்- கண்டி, மெதவல- கண்டி, ஹேதெனிய ஆகிய இடங்களில் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அரசியல்வாதியின் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு, தமக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த எரிபொருள் நிரப்ப நிலைய பணியாளர்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

அதேசமயம் இந்த அடாவடி நடவடிக்கைக்கு எதிராக வரிசையில் நிற்பவர்கள் எவரேனும் கதைத்தால், அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.