அபாயா விவகாரம்: கல்லூரி அதிபர் பிணையில் விடுதலை!

அபாயா விவகாரம்: கல்லூரி அதிபர் பிணையில் விடுதலை!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் அபாயா அணிந்து சென்றமைக்காக தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் கல்லூரி அதிபர் இன்று (4) இரண்டரை இலட்சம்  ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க, சென்ற பெப்ரவரி மாதம்  2 ஆம் திகதி திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கடமையேற்பதற்காக சென்றிருந்த பஹ்மிதா றமீஸை கடமையேற்க விடாது   குழப்பங்களை ஏற்படுத்தி, கழுத்து நெரிக்கப்பட்டதாக கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது சட்டரீதியான கடமையை செய்ய விடாது தடுத்தமை என்ற குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றால் அனுப்பப்பட்ட அழைப்பாணையினைத் தொடர்ந்து வழக்கு இன்று (4) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதிபருக்கெதிராக குற்றச்சாட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டது. இரு தரப்பு சட்டத்தரணிகளின் கடுமையான வாதப்பிரதி வாதங்களைத் தொடர்ந்து வழக்கு நீதிவானால் விசாரணைக்கு (Trial) எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது..

ஆசிரியை பஹ்மிதாவுக்கு ஆதரவாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான் றதீப் அஹமட், ஹஸ்ஸான் றுஷ்தி, ஸாதிர் முகம்மட் மற்றும் எம்.எம்.ஏ.சுபாயிர் ஆகியோர் முன்னிலையாகினர்.