ஒருநாள் தொடரையும் தன்வசப்படுத்திய இலங்கை அணியினர்
இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளர் ஜெரோம் ஜயரத்ன வீரர்களுக்கு நல்ல உத்வேகம் அளிப்பதாக அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை அணி, ஒருநாள் தொடரையும் 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த வெற்றி குறித்து மேத்யூஸ் கூறுகையில், “இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளர் ஜெரோம் ஜயரத்ன வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி நல்ல உத்வேகம் அளிக்கிறார். இதனால் வீரர்கள் நல்ல மனநிலையில் உள்ளனர்.
கடைசி ஒருநாள் போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த பங்களிப்பை அளித்தனர். குஷாலின் அதிரடி ஆட்டம் அற்புதமாக இருந்தது. இது போன்ற சிறப்பான தொடக்கம் என்பது இலக்கை எட்டும் போது அவசியமான ஒன்று.
2வது ஒருநாள் போட்டியில் நல்ல பார்மில் இருந்த திரிமன்னே இந்தப் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டார். எல்லாமே நல்ல முறையில் அமைந்தது. இந்த வெற்றி நல்ல மனநிலையை தருகிறது.
மேலும், துஷ்மந்த சமீரா வேகத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களை மிரட்டினார். 145 கி.மீ வேகத்தில் துல்லியமாக பந்துவீசி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.
முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்” என்று தெரிவித்துள்ளார்.