5 ஆண்டு விடுமுறையில் வெளிநாடு செல்லும் 2,000 அரச பணியாளர்கள்

5 ஆண்டு விடுமுறையில் வெளிநாடு செல்லும் 2,000 அரச பணியாளர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 2,000 அரச பணியாளர்கள்,வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதற்காக ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்ட விடுமுறையை தேர்வு செய்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும் முன்னெப்போதும் இல்லாத இந்த நடவடிக்கை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி அரச பணியாளர்கள், ஊதியமில்லாத விடுப்பில் வெளிநாட்டில் பணிபுரியவோ, தொழில் பயிற்சி பெறவோ அல்லது அவர்களின் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவோ பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த சுற்றறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, மொத்தம் 1988 அரச பணியாளர்கள் ஏற்கனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பை தொடர அனுமதி பெற்றுள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் குறித்த விடுப்பு காலம், பணி மூப்பு மற்றும் ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான பணிக்காலமாக கணக்கிடப்படும்.

எனினும் இந்த விதி, தங்கள் பதவியில் உறுதிப்படுத்தப்படாத நிர்வாக தர அதிகாரிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த அரச பணியாளர்கள், தங்களுடைய சொந்த பெயரில் திறக்கப்பட்ட ஒரு வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு, பணத்தை அனுப்ப வேண்டும் என்ற விதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.