மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்.

மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்.

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களுத்துறை தெற்கில் உள்ள தங்குமிடமொன்றுக்கு அருகாமையில் புகையிரத பாதையில் மர்மமான முறையில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், நாகொட பிரதேசத்தில் வசிப்பிடமாக கொண்ட 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பெற்றோரால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் நேற்று முன்தினம் (06.05.2023) பிற்பகல் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்துள்ளமை சிசிடிவி காட்சி விசாரணைகளில் தெரியவந்துள்ளது.நேற்றுமுன் தினம் மாலை 6.30 மணியளவில் குறித்த இடத்திற்கு வந்த குழுவினர் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து அந்தந்த ஹோட்டலில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவி விடுதிக்குள் செல்வதற்கு வயது தடையாக இருந்தமையினால் தனது நண்பியின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து விடுதிக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இரண்டு அறைகளை முன்பதிவு செய்து ஒரே அறையிலிருந்து நால்வரும் மது அருந்தியதை ஹோட்டல் ஊழியர் ஒருவர் பார்த்ததாக கூறப்படுகின்றது.

இதன்போது இளம் பெண் ஒருவரும்,மற்றைய இளைஞனும் ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளதுடன், ​​​​20 நிமிடங்களுக்குப் பின்னர், மற்றுமொரு இளைஞனும் பயத்துடன் அவசர அவசரம் எனக்கூறி முன்னதாக ஹோட்டலில் இருந்து வெளியேறிய இளைஞனையும்,யுவதியையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.குறித்த மாணவி மூன்றாவது மாடியில் இருந்து புகையிரத தண்டவாளத்தில் குதித்த பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது ஹோட்டலுக்கு உணவு எடுக்க வந்த நபர் ஒருவர் ஹோட்டலை அண்மித்து புகையிரத தண்டவாளத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.இதனையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டதில் குறித்த மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் மாணவியுடன் விடுதிக்கு வந்ததாக கூறப்படும் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவியுடன் அறையில் தங்கியிருந்ததாக கூறப்படும் இளைஞன் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளதாகவும், அவர் இரண்டாவது திருமணம் செய்த பெண்ணிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மாணவியின் உடலின் பல பாகங்களில் கீறல்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதுடன், நீதவான் விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.