
தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள சபையில் ஊழல்: எழுந்துள்ள முறைப்பாடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள எல்பிட்டிய பிரதேச சபையில் ஊழல் நடைபெறுவதாக அதன் உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட போது எல்பிட்டிய பிரதேச சபை வேட்பு மனுக் கோரலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கின் தீர்ப்பு கடந்த வருடம் வழங்கப்பட்டு, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலும் நடைபெற்றது.
அதன் போது, எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தியின் வசம் சென்றிருந்தது.
இந்நிலையில், க்ளீன் ஶ்ரீலங்கா செயற்திட்டத்துக்காக எல்பிட்டிய பிரதேச சபையின் வளங்களை அதன் தவிசாளரும் ஆளுங்கட்சியினரும் துஷ்பிரயோகம் செய்வதாக சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு அளித்துள்ளனர்.