“மஹேல நாட்டிற்கு எதிராக செயற்படுகிறார்” சுமதிபாலவின் குற்றச்சாட்டு ஏமாற்றமே – மஹேல
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தன் மீது குற்றம்சாட்டியிருப்பது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஜயவர்த்தனே கூறியுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஜயவர்த்தனே, தற்போது இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஜயவர்த்தனே இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயற்படுவது சிறந்த விடயம் அல்ல என்று கூறிய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, அவர் தாய் நாட்டிற்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இது பற்றி பேசிய ஜயவர்த்தனே, “சுமதிபாலவின் கேள்வி சிரிக்கும்படியே உள்ளது. இங்கிலாந்து அணியில் எனது பணி அந்த அணி வீரர்களுக்கு உதவி செய்வது தான். அந்த உதவியும் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது போன்ற அளவில் தான் இருக்கும்.
மற்றபடி இங்கிலாந்து என்னை இலங்கை அணியின் ரகசியங்களை பகிர்ந்து கொள்வதற்காக தெரிவு செய்யவில்லை. அதற்கு அணியில் ஆய்வாளர்கள், பயிற்சியாளர்கள் உள்ளனர்.
இருப்பினும் அவரின் குற்றச்சாட்டால் எனக்கு வருத்தம் இல்லை. ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் இருந்து வந்த இந்த கருத்து எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.