முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிற்கு கொழும்பு விசேட உயர் நீதிமன்றம் அழைப்பாணை
முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒன்றிற்காக கோத்தபாயவிற்கு இவ்வாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 3ம் திகதி கொழும்பு விசேட உயர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோத்தபாய ராஜபக்சவிற்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசேட நீதிமன்றின் ஆணையாளர் நீதவான் ஐராங்கனி பெரேரா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
2006ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலில் சில இராணுவ உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
விஜயகுமார் எனப்படும் அங்குமணி என்ற தற்கொலைதாரி இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தொடர்பிலான மனுவை அணமையில் பரிசீலனை செய்த போது இந்த அழைப்பாணை உத்தரவு கோத்தபாயவிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் கோத்தபாய மீது நடத்தபபட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.