தென் சீனக் கடல் பிரச்சினை – சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தென் சீனக் கடல் பிரச்சினை – சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தென் சீனக் கடல் பிரச்சினையை ஒருதலைப்பட்சமாக தீர்க்க முயற்சிக்க வேண்டாம் என்று சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஜான் கெர்ரி இரண்டு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தென் சீனக் கடல் பிரச்சினையை ஒருதலைப்பட்சமாக தீர்க்க முயற்சிக்க வேண்டாம் என்று சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்;

தென் சீனக் கடல் பிரச்சினையில் அமைதியான தீர்வை அமெரிக்கா விரும்புகிறது என்பதை தெளிவு படுத்துகிறேன்.

எதற்கும் உரிமை கோருபவர் நாங்கள் அல்ல. அதற்கான எந்நடவடிக்கையையும் நாங்கள் எடுக்கவில்லை. சட்டத்தின் வழியில், பேச்சுவார்த்தையின் மூலம் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

எனத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக தென் சீன கடல்பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் அதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தங்களுக்கும் அந்த பகுதியில் பங்கு உண்டு என்று சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தற்போது தென் சீனக் கடலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு ஒன்றில் விமானங்கள் இறங்குவதற்கு வசதியாக ஓடுபாதை ஒன்றை சீனா ரகசியமாக அமைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.