துப்பாக்கிகளுடன் விளையாடிய துமிந்த சிறையில் என்ன செய்கிறார்?

துப்பாக்கிகளுடன் விளையாடிய துமிந்த சிறையில் என்ன செய்கிறார்?

மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நிலை பரிதாபகரமாக மாறியுள்ளது.

சிறைச்சாலையின் சீ- 3 அறையின் தனி செல்லில் துமிந்த அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிட்டத்தட்ட 20 மீற்றர் நீளமான அறையை கொண்ட கட்டிடத்தொகுதியின் ஒரு செல்லில் ஒரு கைதி தடுத்து வைப்பது சாதாரணமானதாகும். எனினும் தற்போது ஒரு செல்லில் துமிந்த உட்பட மூவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த செல்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகளுக்கு ஒரு நாளைக்கு அரை மணித்தியாலம் மாத்திரம் வெளியில் சென்று உடற்பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட காலப்பகுதியில் துமிந்த கிரிக்கெட் விளையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை வெளியில் அழைத்து வந்த சந்தர்ப்பத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மேலும் சிலருடன் கிரிக்கெட் விளையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ள துமிந்தவினால் அனுமதி கோரப்பட்ட போதும், சிறைச்சாலை பிரதானி அதற்கு அனுமதி வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.